Published : 12 Oct 2020 07:45 AM
Last Updated : 12 Oct 2020 07:45 AM

உத்தரபிரதேசத்தின் தியோரியா தொகுதி இடைத்தேர்தலில் பாலியல் புகாரில் சிக்கியவர் காங். வேட்பாளராக அறிவிப்பு: கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டர் மீது தாக்குதல்

உ.பி.யில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பெண் தொண்டர் கட்சியினரால் தாக்கப்பட்டார்.

உ.பி.யில் தியோரியா தொகுதி பாஜக எம்எல்ஏ காலமானதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தியோரியாவில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், இங்கு அக்கட்சி சார்பில் முகுந்த் பாஸ்கர் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி, தாராதேவி என்ற பெண் தொண்டர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த கட்சியினரால் அவர் தாக்கப்பட்டார். பிறகு அவரை சிலர் அங்கிருந்து மீட்டனர். இது தொடர்பான செல்போன் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து போலீஸில் தாராதேவி புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், தாக்குதலுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர சிங், துணைத் தலைவர் அஜய் சிங் மற்றும் இருவர் காரணம் என கூறியுள்ளார். அவர்கள் தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும் மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தாராதேவி கூறும்போது, “ஒருபுறம் ஹாத்ரஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு எங்கள் கட்சித் தலைவர்கள் போராடுகின்றனர். மறுபுறம் பாலியல் வழக்கில் தொடர்புள்ளவருக்கு எங்கள் கட்சி ‘சீட்’ தருகிறது. இது தவறான முடிவாகும். இது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்” என்றார்.

கூட்டத்தில் தாராதேவியும் அவருடன் வந்த 3 பெண் தொண்டர்களும் கட்சியின் தேசிய செயலாளர் சச்சின் நாயக் மீது பூங்கொத்தை வீசியதாக புகார் கூறப்பட்டது. இதனை தாராதேவி மறுத்தார். “சச்சின் நாயக்கை நான் தாக்கவில்லை. முகுந்த் பாஸ்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என கேட்க முயன்றதால் தாக்கப்பட்டேன்” என்றார்.

இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, தனது ட்விட்டர் பதிவில், “மனரீதியாக நோய்வாய்ப்பட்ட இதுபோன்ற நபர்கள் எப்படி அரசியலுக்கு வருகின்றனர்? மகளிர் ஆணையம் இச்சம்பவத்தை கவனத்தில் கொண்டுள்ளது” என கூறியுள்ளார்.

ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக காங்கிரஸ் முன்னணியில் நின்று போராடி வரும் வேளையில், அக்கட்சியில் பெண் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x