

இந்தியாவில் கரோனா வைரஸுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம், கரோனா தொற்று ஒட்டுமொத்த எண்ணிக்கை 69 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 496 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 69 லட்சத்து 6 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்து 6 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 85.52 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 93 ஆயிரத்து 592 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12.94 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 964 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 358 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 101 பேர், தமிழகத்தில் 68 பேர், மேற்கு வங்கத்தில் 63 பேர், உத்தரப் பிரதேசத்தில் 45 பேர், ஆந்திராவில் 42 பேர், டெல்லியில் 37 பேர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 8 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 680 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 68 ஆயிரத்து 705 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.