ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கடந்த ஆண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண், அவரது கணவர் எதிரிலேயே கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது இந்த சம்பவத்தை செல்போனில் ஒருவர் படமாக்கி சமூக வலைதளங்களில் பின்னர் வெளியிட்டார். இது தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஜேஷ் குமார் சர்மா தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட சோட்டி லால், ஹன்ஸ்ராஜ் குர்ஜார், அசோக் குமார் குர்ஜார், இந்த்ராஜ் சிங் குர்ஜார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாலியல் வன்கொடுமை காட்சியை படம் பிடித்து வெளியிட்ட முகேஷ் குர்ஜாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in