Last Updated : 06 Oct, 2020 12:42 PM

 

Published : 06 Oct 2020 12:42 PM
Last Updated : 06 Oct 2020 12:42 PM

கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிடக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு சிபிஐஎம் எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்

புதுடெல்லி

கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதை சிபிஐஎம் கட்சியின் எம்.பியான சு.வெங்கடேசன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மதுரை தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் தனது கடிதத்தில் எழுதிருப்பதாவது: உச்ச நீதி மன்றத்தில் மேற்கூறிய பொருள் மீது மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வாக்கு மூலம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

ஏற்கனவே கடன் தள்ளிவைப்பு காலத்திற்கான இ.எம்.ஐ தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடும் கூட்டுவட்டி முறையை கைவிட வேண்டும் என்று நான் தங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இது, தற்போதையப் பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் இக் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு முன் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

கஜேந்திர சர்மா என்பவர் தொடுத்த வழக்கில் மத்திய அரசு தனது பதிலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த வாக்கு மூலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்கள் மீது "வட்டிக்கு வட்டி" விதிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடியை விட்டு மீண்டு வர உதவுமா? என்ற கவலையை குறு, சிறு, நடுத்தர தொழிலதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, எல்லா குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இம்முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும், உள்ளடக்கியதாக இருக்குமென்று நம்புகிறேன்.

அதற்குரிய வகையில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x