அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்கலாம்: வழிகாட்டுதல்களை வெளியிட்டு மத்திய அரசு அனுமதி

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்கலாம்: வழிகாட்டுதல்களை வெளியிட்டு மத்திய அரசு அனுமதி

Published on

வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் திரையரங்குகளும் நாடு முழுவதும் மூடப்பட்டன.

ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிட்டப்பட்டுள்ளன.

இதன்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:

திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்

மொத்த இருக்கையில் 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். முகக்கவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

ஒரேயொரு திரை மட்டுமேயுள்ள திரையரங்குகள் டிக்கெட் கவுண்ட்டர்களை திறக்கலாம். ஆனாலும் ஆன்லைன் புக்கிங் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிரது.

காற்றோட்ட வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும், அனைத்து குளிரூட்டப்பட்ட திரையரங்குகளும் அரங்கினுள் 23 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை பராமரிப்பது அவசியம்.

செப்.30ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தன் அன்லாக் வழிகாட்டுதல்களில் அக்.15 முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in