Last Updated : 05 Oct, 2020 08:04 AM

 

Published : 05 Oct 2020 08:04 AM
Last Updated : 05 Oct 2020 08:04 AM

கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ராஜினாமா: முதல்வர் எடியூரப்பாவுக்கு மறைமுக நெருக்கடி

பாஜக தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் சி.டி.ரவி சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த வாரம் இவர் பாஜக தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிமுறைப்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், சி.டி.ரவி நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடம் வழங்கினார்.

இதனால் 34 இடங்களைக் கொண்ட கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. எனவே காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை கைப்பற்ற மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த எம்எல்ஏ-க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் அண்மையில், ‘பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி இருப்பது போல, 75 வயதுக்கு அதிகமானவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற எழுதப்படாத விதியும் இருக்கிறது’ என தெரிவித்தார். அவர் 78 வயதான கர்நாடக முதல்வர் எடியூரப்பாவையே மறைமுகமாக குறிப்பிடுவதாக சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சி.டி.ரவியிடம், ‘பாஜகவின் விதிமுறை எடியூரப்பாவுக்கு பொருந்தாதா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.டி.ரவி, "எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரும் கட்சியின் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். இல்லாவிடில் கட்சி மேலிடம் தலையிட்டு, விதிமுறையை அமல்படுத்தும்" என்றார்.

தற்போது பாஜகவின் விதிமுறையை மதித்து சி.டி.ரவி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் எடியூரப்பாவுக்கு மறைமுக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x