Published : 05 Oct 2020 07:03 AM
Last Updated : 05 Oct 2020 07:03 AM

சீனாவில் இருந்து செயல்படும் அசாமின் உல்பா தீவிரவாதிகள்: மத்திய அரசு திடுக்கிடும் தகவல்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா, அண்டை நாடான மியான்மரின் சாகாயிங் பகுதியில் தீவிரவாத முகாம் அமைத்து செயல்பட்டு வந்தார். அசாமை தனி நாடாக்க வேண்டும் என்று அவர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் கடந்த 2019-ம் ஆண்டில் மியான்மர் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாத குழுக்கள் மீது மியான்மர் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதில் உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பின் முகாம்களையும் மியான்மர் ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பு சீனாவுக்கு இடம்பெயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செயல்படும் சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு சீனாவின் யுனான் மாகாணம், ரூய்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகிறது. சீனாவில் உள்ள முகாமில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு, மென்பொருள் நிபுணர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக இணையவழி தாக்குதலை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு சீன அரசு ஆதரவு அளித்து வருகிறது. அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் இணைந்து காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கும் சீனா ஆயுதங்களை விநியோகம் செய்வதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x