Published : 04 Oct 2020 05:34 PM
Last Updated : 04 Oct 2020 05:34 PM
பிஹாரில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(எல்ஜேபி) முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஹாரில் நிதிஷ்குமார், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 4ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதில் ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி கட்சியும் இடம் பெற்றிருந்தது.
இந்த சூழலில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தில் தேர்தல் வரும் 28-ம் தேதியிலிருந்து மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிஹாரில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி நடக்கிறது. முதல் கட்டத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
அக்டோபர் 1-ம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. வரும் 8-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 9-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும் 12-ம் தேதி க வேட்புமனுவைத் திரும்பப் பெற டைசி நாளாகும்.
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் போட்டியிடும் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. தற்போது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிகளை பிரி்த்துக்கொள்வது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.
இந்த சூழலில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியான எல்ஜேபி, நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இதய அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரின் மகன் சிராக் பாஸ்வான் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறார்.
ஆனால் சிராக் பாஸ்வானுக்கும், முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையே மறைமுகமான மோதல்கள், அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதன் வெளிப்படாக எல்ஜேபி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் சிராக் பாஸ்வான் தலைமையில் நடந்துள்ளது.
இதில் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த அனைவரும் போராடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை சந்திக்கமாட்டோம். அவ்வாறு சூழல் ஏற்பட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதுதான் தீர்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இதற்கிடையே இன்று மாலை பாஜக தலைமை, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் ேதர்வு குறித்து ஆலோசனை நடத்தி இறுதி செய்ய உள்ளது. இன்னும் வேட்புமனுத்தாக்கலுக்கு 4 நாட்கள் இருக்கும் நிலையில் சிராக் பாஸ்வானின் முடிவு பாஜக கூட்டணிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, பட்டியிலினத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாக்குகளை லோக் ஜனசக்தி கையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிராக் பாஸ்வானை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT