Published : 04 Oct 2020 07:50 AM
Last Updated : 04 Oct 2020 07:50 AM

கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு காப்புரிமையில் இருந்து விலக்கு வேண்டும்: உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா, தெ.ஆப்பிரிக்கா கோரிக்கை

கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு, காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவும் தென் ஆப்பரிக்காவும் உலக வர்த்தக அமைப்பை வலியுறுத்தி உள்ளன.

கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிர முயற்சியில் உள்ளன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை (டிரிப்ஸ்) விதிகளின் கீழ், கரோனா தடுப்பு மருந்துக்கு உலகவர்த்தக அமைப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் வலியுறுத்தி உள்ளன. அதன்படி, கரோனா தடுப்பு மருந்துக்கான காப்புரிமை (பேடன்ட்) மற்றும் அறிவுசார் சொத்துரிமை (இன்டலக்சுவல் பிராப்பர்டி) ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்க கோரியுள்ளன.

இதுதொடர்பான பரிந்துரையை கடந்த 2-ம் தேதி டிரிப்ஸ் கவுன்சிலிடம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் வழங்கி உள்ளன. அதை உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக் கொண்டால், கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்ள வழி ஏற்படும். டிரிப்ஸ் கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 15 - 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அப்போது இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள கனடா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், சுவிட்சர்லாந்து, பிரிட்டன்,அமெரிக்கா ஆகிய நாடுகளின் கருத்தைப் பொறுத்தே கரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமையில் இருந்து விலக்களிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால், உலகம் முழுவதும் மருந்து தயாரிக்கவும், அனைவருக்கும் கிடைக்கும் வகையில் குறைந்த விலைக்கு விற்கவும் முடியும். எனவே ‘டிரிப்ஸ்’ ஒப்பந்தப்படி தடுப்பு மருந்துக்கு விலக்கு அளிக்கலாம் என்று இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பை வலியுறுத்தி உள்ளன.இதற்கிடையில், இரு நாடுகளின்பரிந்துரைகள் தற்போதுள்ள சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே, இந்தப் பரிந்துரைக்கு உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x