ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை ஸ்ரீ ராம் குழுமம் விற்க முடிவு

ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை ஸ்ரீ ராம் குழுமம் விற்க முடிவு

Published on

இந்தியக் கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு இணைக்கப்பட்ட போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் விராட்’. சுமார் 27,800 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட போர்க் கப்பலுக்கு 2017-ம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டது. ஏலம் விடப்பட்ட இந்தப் போர்க் கப்பலை, ஸ்ரீராம் குழுமம் கடந்த ஜூலை மாதம் ரூ.38 கோடிக்கு வாங்கியது.

அதன்பின், ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பல் அகமதாபாத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது.

தற்போது மும்பையைச் சேர்ந்த ‘என்வி டெக்’ நிறுவனமானது, ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதனை அருங்காட்சியகமாக மாற்றுவதாகவும் கூறியுள்ளது.

அதை ஏற்று போர்க் கப்பலை ரூ.100 கோடிக்கு விற்க ஸ்ரீ ராம் குழுமம் தயாராகி வருகிறது. எனினும், போர்க் கப்பல் என்பதால், இதை வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டியது அவசியம்.

ஒரு வாரத்துக்குள் என்வி டெக் நிறுவனம் கப்பலை வாங்காவிட்டால், அதை உடைக்கப் போவதாக ஸ்ரீ ராம் குழுமத்தின் தலைவர் முகேஷ் படேல் நேற்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in