Last Updated : 18 Sep, 2015 09:24 AM

 

Published : 18 Sep 2015 09:24 AM
Last Updated : 18 Sep 2015 09:24 AM

பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சவுதி அரேபிய தூதரக அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேறினார்

நேபாள பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சவுதி அரேபிய தூதரக அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேறினார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இரு நேபாளப் பெண்களை பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சவுதி தூதரக முதன்மைச் செயலாளர் மஜித் ஹஸன் அசூர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரக அதிகாரிக்கு உள்ள சட்டப்பாதுகாப்பு காரணமாக வெளியேற அவர் அனுமதிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் எப்படி வெளி யேறினார் என்பது தெரிவிக்கப்பட வில்லை.

நேபாளம் வலியுறுத்தல்

அதேசமயம் இந்தியாவுக்கான நேபாள தூதர் தீப் உபாத்யாய் கூறும்போது, “தூதரக அதிகாரி இந்தியாவை விட்டு வெளியேறி விட்டாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது மிக மோசமான மனிதத்தன்மையற்ற செயல். இந்தியாவுடனும், சவுதி யுடனும் நேபாளம் நல்ல நட்பைப் பேணி வருகிறது. ஆனால், குற்றம் நடத்திருந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாராளமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக நேபாள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்துடன் மிக நெருக்கமான உறவை பாஜக தலைமையிலான மத்திய அரசு பேணி வருகிறது. அதேசமயம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவிலிருந்துதான் 2-வது அதிகபட்சமாக இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. எனவே, இவ்விவகாரத்தை மத்திய அரசு மிகக் கவனமாக கையாள்கிறது.

தூதரக அதிகாரி வெளியேறிய போதிலும் விசாரணை தொடரும் என குர்கான் காவல் துறை அறிவித்துள்ளது.

“விசாரணை தொடர்கிறது. இப்போதைய நிலையில் கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது. அந்த தூதரக அதிகாரியை விசாரிக்க அனுமதி கோரி கடந்த 9, 10-ம் தேதிகளில் வெளியுறவு அமைச்சகத்துக்கு தனித்தனி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ” என விசாரணை அதிகாரியும் குர்கான் காவல் துறை ஆணையருமான நவ்தீப் சிங் விர்க் தெரிவித்துள்ளார்.

தூதரக அதிகாரியை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி சவுதி தூதரகத்துக்கு இந்தியா நெருக்கடி கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்தே, அவரை திரும்ப அழைத்துக் கொள்ள சவுதி முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x