Published : 01 Oct 2020 09:30 PM
Last Updated : 01 Oct 2020 09:30 PM

கேரளாவில் 8 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை: முதல்வர் பினராயி விஜயன் கவலை

கேரளாவில் இன்று 8,135 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் 29 பேர் மரணம் அடைந்தனர் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரத்தில் அவர் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியது:

''கேரளாவில் இன்று நோய்த்தொற்று அதிக அளவில் உள்ளது. இன்று 8,135 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 1,072 பேருக்கு நோய் பரவி உள்ளது. அவர்களில் 1,013 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 968 பேர் மலப்புரம், 934 பேர் எர்ணாகுளம், 856 பேர் திருவனந்தபுரம், 804 பேர் ஆலப்புழா, 653 பேர் கொல்லம், 613 பேர் திருச்சூர், 513 பேர் பாலக்காடு, 471 பேர் காசர்கோடு, 435 பேர் கண்ணூர், 340 பேர் கோட்டயம், 223 பேர் பத்தனம்திட்டா, 143 பேர் வயநாடு, 130 பேர் இடுக்கி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 29 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 67 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 218 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 7,013 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 730 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 105 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 29 பேருக்கு நோய் பரவி உள்ளது.

கரோனா நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 2,828 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,31,052 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 72, 339 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 59,157 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,43,107 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,12,849 பேர் வீடுகளிலும், 30,258 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா நோய் அறிகுறிகளுடன் 3,150 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தினசரி பரிசோதனை எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சிபி நாட் , ட்ரூ நாட் உள்பட இதுவரை மொத்தம் 29,85,534 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள குழுக்களிடம் இருந்து 2,05,349 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. எனவே அனைவரும் கண்டிப்பாகக் கரோனா நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். நோய் பரவுவது குறித்து பலமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. பெரும்பாலானோர் அதை கடைப்பிடிப்பதில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அதிக அளவில் நோய் பாதிப்பு உள்ளது.

இவர்கள்தான் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுகின்றனர். விடுமுறை தினங்களில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்கின்றனர். மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவது அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் செல்கின்றனர். இது நோய்ப் பரவலை அதிகரிக்கும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் அதிகளவில் மரணமடைகின்றனர். எனவே வீடுகளில் இந்த வயது உடையவர்கள் இருந்தால் வெளியே சென்று வரும் ஆட்கள் கவனமாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x