Last Updated : 01 Oct, 2020 04:11 PM

 

Published : 01 Oct 2020 04:11 PM
Last Updated : 01 Oct 2020 04:11 PM

உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு; பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்வரை போராடுவேன்: பிரியங்கா காந்தி ஆவேசம்

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும்வரை தொடர்ந்து போராடுவேன், முதல்வர் ஆதித்யநாத் பெண்கள் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர்.

இந்நிலையி்ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து இன்று ஹத்ராஸ் புறப்பட்டனர்.

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற காரை மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடக்கத் தொடங்கினர்.

அப்போது பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:

“ ஹத்ராஸ் சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்பான அனைவரின் மீதும் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களின் வாகனம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் நடந்தே ஹத்ராஸுக்கு செல்கிறோம். நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும், அவர்களுக்கு எங்களின் ஆறுதலைத் தெரிவிக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் ஆதித்யநாத் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன்.

இந்த மாநிலத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பில்லாமலும், ஆபத்தில் இருப்பதாகவும் உணர்கிறார்கள். இதற்காக ஒட்டுமொத்த மாநித்தில் உள்ள பெண்களும் போராடுவோம். நாள்தோறும் பெண்கள் பலாத்காரம் நடக்கிறது, உ.பி.யில் நாள்தோறும் 11 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யபப்டுகின்றன.

இதுபோன்று பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ஆனால், அரசு ஏதும் செய்யவில்லை. அரசை விழித்துக் கொள்ளச் செய்யாவிட்டால் அல்லது உலுக்காவி்ட்டால், அவர்கள் பெண்கள் பாதுகாப்புக்கு ஏதும் செய்யமாட்டார்கள்.

இதேபோன்று உன்னவ் பாலியல் பலாத்கார சம்பவத்தின்போதும் போராட்டம் நடத்தினோம். மாநிலத்தில் உள்ள ஆளும் பாஜக அரசு, பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை.

இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நாங்கள் இந்துக்கள்தான். ஆனால், ஒரு தந்தை தனது மகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்க முடியாது, உடலை எரியூட்ட அனுமதிக்க முடியாது என எங்கு எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய அநீதி. அதிலும் இதை மாநில அரசு செய்தது மிகப்பெரிய அநீதியாகும்”.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x