

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 41.53 சதவீத பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பில் 33.84 சதவீதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், அதன் தாக்கத்தை அந்நாட்டில் குறைத்துக்கொண்டு உலக நாடுகளைப் பாடாய்ப்படுத்துகிறது.
உலக அளவில் கரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள்தான் மிகவும் மோசமாகப் பாதி்க்கப்பட்டுள்ளன. அதிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் முதன்முதலாக கரோனா வைரஸ் நோயாளி கடந்த ஜனவரி 31-ம் தேதி கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்திருந்த அந்த மருத்துவ மாணவிக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மாணவி குணமடைந்தார். அதன்பின் நாட்டில் மெல்ல மெல்ல கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.
மார்ச் 15-ம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 100 பேரை எட்டியது. கடந்த மே 19-ம் தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தையும், ஜூன் 27-ம் தேதி 5 லட்சத்தையும் கடந்தது. ஜூலை 17-ம் தேதி கரோனா பாதிப்பு 10 லட்சத்தையும் கடந்தது.
இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 5 லட்சம் பேரும், ஜூலையில் 11 லட்சம் பேரும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கரோனா வைரஸால் 19 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 73 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 98 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் மாதம் முடிந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் 26 லட்சத்துக்கு 21 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்து 584 ஆக உள்ளது. 41.53 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் கரோனா சிகிச்சையிலிருந்து 24 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 52 லட்சத்து 73 ஆயிரத்து 201 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 46.15 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதுவரை கரோனாவில் உயிரிழப்பு என்பது 98,678 ஆக இருக்கிறது. இதில் 33.84 சதவீதம், அதாவது 33 ஆயிரத்து 390 பேர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் மக்களில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து பிரேசிலும், அமெரிக்காவும் உள்ளன என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவும், மூன்றாவதாக பிரேசிலும் இடம் பெற்றுள்ளன. அதேபோல உலக அளவில் கரோனாவில் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாட்கள் தேவைப்பட்டன. அதன்பின் 59 நாட்களில் 10 லட்சத்தை எட்டியது. 10 லட்சத்திலிருந்து 20 லட்சத்தை 21 நாட்களில் பிடித்தது.
20 லட்சத்திலிருந்து 30 லட்சத்தை அடுத்த 16 நாட்களிலும், 30 லட்சத்திலிருந்து 40 லட்சத்தை 13 நாட்களிலும் கடந்தது. 40 லட்சத்திலிருந்து 50 லட்சத்தை 11 நாட்களிலும், 50 லட்சத்திலிருந்து 60 லட்சத்தை 12 நாட்களிலும் எட்டியுள்ளது.