தலித் பெண் பாலியல் வன்கொடுமையில் பலியான துயரம் ஒருபுறம், குடும்பத்தினரை அழைக்காமல் உடலை தகனம் செய்தது வெட்கக்கேடு: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

மம்தா. | கோப்புப் படம்.
மம்தா. | கோப்புப் படம்.
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் 4 பேரால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி பிறகு இறந்தே போனார்.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அந்தப் பெண் இறந்து போனார். இதற்கு நாடு முழுதும் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன, உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கூர் சமூகப்பிரிவினருக்கு அதிக சலுகைகளை அளிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பெற்றோர் முன்னிலையில் அல்லாமல் அந்த தலித் பெண்ணுக்கு இறுதிச் சடங்கும் நடத்தப்பட்டு விட்டது.

இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தார், “இளம் தலித் பெண்ணுக்கு நடந்த கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

பலாத்காரம், மரணத்தைவிடவும் கொடுமையானது கட்டாயமாக அவரது உடலை தகனம் செய்தது, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. இறுதி சடங்குக்கு பெற்றோரையும் அழைக்கவில்லை. பெற்றோர் ஒப்புதலும் பெறவில்லை, இது வெட்கக் கேடு.

இந்த நடவடிக்கைகள் வாக்குகளுக்காக உயர்ந்த கோஷங்களையும், உன்னத வாக்குறுதிகளையும் அளிப்பவர்களின் உண்மையான தன்மை என்ன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது” என்று கடுமையாகச் சாடினார்.

பலியான தலித் பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் பணமும் வீடு, மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உ.பி.அரசு அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in