

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்துள்ளது, அதேநேரம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்தை நெருங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றால் 80 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 62 லட்சத்து 25 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.
இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்து 87 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 83.33 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 441 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,179 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 97 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.57 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 7 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 729 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 86 ஆயிரத்து 688 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் 1,179 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 430 பேர், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 136 பேர், பஞ்சாப்பில் 75 பேர், தமிழகத்தில் 70 பேர், உத்தரப் பிரதேசத்தில் 63 பேர், மேற்கு வங்கத்தில் 62 பேர், டெல்லியில் 48 பேர், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் தலா 39 பேர், ஆந்திாவில் 35 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.