Published : 29 Sep 2020 08:31 PM
Last Updated : 29 Sep 2020 08:31 PM

பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன் 1-ம் தேதி ஆலோசனை

புதுடெல்லி

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று காற்று மாசுபாடு மற்றும் பயிர்களின் அடிக்கட்டைகளை எரிப்பது குறித்து கூட்டம் நடைபெறுகிறது.

வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில், மனிதர்களால் ஏற்படும் காரணங்கள் நீங்கலாக, வானிலை மற்றும் புவியியல் காரணங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னை குறித்து வலியுறுத்திப் பேசிய சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுபாட்டை அகற்றுவதற்காக, மத்திய மாநில அரசுகளும் குடிமக்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இது அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் 1 அக்டோபர் 2020 அன்று மெய்நிகர் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பிரச்னையை இன்னது என்று அங்கீகரித்துக் கொள்ளும் நிலையே அப்பிரச்சனையின் தீர்வுக்கான முதல் நடவடிக்கையாகும் என்று கூறிய ஜவடேகர், 2016-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடிதொடக்கி வைத்த, அப்போதைக்கப்போது தெரிந்து கொள்ளக் கூடிய காற்று தர குறியீடு, காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களைக் கண்டறியும் முக்கிய கருவியாக செயல்படுகிறது என்றும், காற்று மாசுபாட்டை அகற்றுவதற்காக கொள்கை அளவிலான முயற்சிகளை அறிவுறுத்தவும் உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

குளிர் காலங்களில், குறிப்பாக புதுடெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படும் பிரச்னை வானிலை காரணங்கள் தொடர்புடையவையும் ஆகும் என்றும் அமைச்சர் கூறினார்.

காற்றின் வேகம், அதன் கலவை உயரம் ஆகியவற்றின் பெருக்குத் தொகை அளவே காற்றோட்டக் குறியீடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரத்தை பாதிப்பதில் இது கணிசமான பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் குளிர்ந்த, உலர்ந்த காற்று, நிலத்தை அடிப்படையாகக் கொண்டு சுழன்றடிக்கும் குறைந்த காற்று நிலை அதிகமாக காணப்படும்.

இதனால் காற்று தேங்கி விடுகிறது. காற்று பரவிச் செல்ல சாதகமற்ற சூழல் உருவாகிறது. குளிர்காலங்களில் இந்தியாவின் வடக்கு வடமேற்கு பகுதியில் இருந்து கிழக்கு முகமாக காற்று வீசுகிறது இதனால் காற்று மாசுபாடும் பனிமூட்டமும் ஏற்படுகிறது. ‌. இதையடுத்து டெல்லியில் குறிப்பாக குளிர் காலங்களில், மிக அதிக அளவிலான பனிமூட்டம் ஏற்படுகிறது. உள்ளூர் அளவிலும், மண்டல அளவிலும் காற்று மாசுபாடு ஏற்படுவதால் இது மேலும் மோசமடைகிறது

காற்று மாசுபாட்டை அகற்றுவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். பதர்பூர் மின் நிலையம் மூடப்பட்டது; சோனிபட் மின் நிலையம் படிப்படியாக மூடப்பட்டது; காற்று மாசுபாடு குறைவாக உள்ள பி எஸ் VI வாகனங்கள் எரிபொருள் தரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

டெல்லியில் சுற்றுப்புற விரைவு வழிப் பாதையை விரைந்து நிறைவேற்றியது; ஈ-வாகனங்களுக்கு மானியம் வழங்கியது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x