Published : 29 Sep 2020 07:48 AM
Last Updated : 29 Sep 2020 07:48 AM

திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரூ.25 கோடியில் மலைவழிப்பாதை சீரமைப்பு பணிகள்: ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி அடிக்கல்

திருப்பதியில் இருந்து திரு மலைக்கு நடந்து செல்லும் மலைப்பாதையை ரூ.25 கோடி செலவில் சீரமைக்கும் பணிக்கு ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அலிபிரியிலிருந்து திருமலைக்கு 7.6 கி.மீ தூரம் உள்ளது.இந்த வழியாக சாதாரண நாட்களில் பக்தர்கள் சுமார் 30 முதல் 35 ஆயிரம் பேர் நடந்து சென்று சுவாமியை தரிசிப்பர். இதுவே முக்கிய நாட்களில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமியை தரிசனம் செய்வார்கள். இந்த பாதையில் ஓரிருஇடத்தில் மட்டுமே மேற்கூரைகள் உள்ளன. அலிபிரி நடைபாதை முழுவதும் மேற்கூரைகள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. மேலும், குடிநீர் குழாய்கள், மருத்துவ மையங்கள், பாதுகாப்பு அறைகள் ஆகியவை கட்டப்படும். மேலும், புதிய மின் கம்பிகள், கேபிள் கம்பிகளும் பொருத்தப்பட உள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே ரூ.25 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தசெலவை ரிலையன்ஸ் நிறுவனம் சுவாமிக்கு செலுத்தும் காணிக்கையாக பாவித்து இலவசமாக செய்து கொடுக்கவுள்ளது. 6 மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் கையெழுத்திட..

அலிபிரி அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்காக (எஸ்விபிசி) ரூ.20 கோடிசெலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை திறந்து வைத்த துணை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

வேற்று மதத்தவர் என்பதால், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருமலைமதப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் வலியுறுத்தி வருகின்றன. இது அவசியம் இல்லாதது. ஜெகன்மோகன் ரெட்டி நெற்றியில் திருநாமம் இட்டு பக்தியுடன் சுவாமிக்கு அரசு சார்பில்பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக கொடுத்தார். இதைவிட முதல்வர் ஜெகனுக்கு சுவாமி மீதுநம்பிக்கை வேண்டும் என கேட்பதில் அர்த்தமில்லை. ஜெகன்மோகன் சிறப்பாக ஆட்சி புரிவதால், அவரை அரசியல் ரீதியாக கேள்வி கேட்க முடியாமல், ஆன்மிகத்தை ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x