Published : 29 Sep 2020 07:00 AM
Last Updated : 29 Sep 2020 07:00 AM
எல்லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரம்மோஸ், நிர்பய், ஆகாஷ் ஏவுகணைகளை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
300 கிலோ வெடிபொருளுடன் வானிலிருந்து வான் இலக்கை தாக்கக் கூடிய மற்றும் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகள் நமக்கு தற்போது முக்கிய அரணாகத் திகழ்கின்றன. திபெத் மற்றும் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ளசீன விமானப் படை தளங்கள் மட்டுமின்றி இந்தியப் பெருங்கடலில் உள்ள சீன போர்க் கப்பல்களையும் இது கவனித்துக் கொள்ளும்.
பிரம்மோஸ் ஏவுகணைகள் லடாக்கில் போதிய எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப ‘சுகோய்-30 எம்கேஐ’ ஜெட் விமானங்கள்மூலம் இவற்றை டெலிவரி செய்யமுடியும். நிர்பய் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் 1,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்கை தாக்க முடியும்.
மூன்றாவதாக ஆகாஷ் எஸ்ஏஎம் ஏவுகணைகளும் லடாக்கில் போதிய எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. லடாக்கில் சீன விமானப் படை அத்துமீறலில் ஈடுபடுமானால் இந்த ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த முடியும். போர் விமானங்கள், குரூஸ் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என வானில் இருந்து எவ்வித அச்சுறுத்தலையும் இந்த ஏவுகணை எதிர்கொள்ளும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT