Published : 28 Sep 2020 10:37 PM
Last Updated : 28 Sep 2020 10:37 PM

விடை பெறத் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்று விலகியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகளுக்கு முக்கிய ஆதாரமாக தென்மேற்கு பருவமழை உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தென்மேற்கு பருவமழை பெய்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீரை வழங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இந்த சீசனில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான மழை பொழிவு பெறுகின்றன.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இயல்பை விடவும் பல மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் பெய்து வருகிறது.

இந்தநிலையில் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்று விலகியுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்:

வடமேற்கு இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் காற்றின் தாழ்வான அடுக்குப் பகுதியில் புயல் எதிர்ப்பு சுழற்சி உருவாகி இருப்பதாலும், ஈரப்பதம் மற்றும் மழைப் பொழிவு கணிசமாகக் குறைந்திருப்பதாலும், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இருந்து இன்று, 2020 செப்டம்பர் 28-ம் தேதி தென்மேற்குப் பருவமழை உள்வாங்கியது. வழக்கமாக இது செப்டம்பர் 17 ஆம் நடக்கும் நிகழ்வாக இருந்து வந்தது. தற்போது சில நாட்கள் தாமதமாகியுள்ளது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x