Published : 28 Sep 2020 07:22 PM
Last Updated : 28 Sep 2020 07:22 PM

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரித்து சட்டப்பேரவைகளில் தீர்மானம்: காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா காந்தி உத்தரவு

புதுடெல்லி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பங்கேற்றன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சி வெளியேறியது. அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இன்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு. அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x