Last Updated : 27 Sep, 2020 11:48 AM

 

Published : 27 Sep 2020 11:48 AM
Last Updated : 27 Sep 2020 11:48 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது: குணமடைந்தோர் எண்ணிக்கை 49,41,627 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றால் 88 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 59 லட்சத்து 92 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது.

இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 627ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 82.46 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 56 ஆயிரத்து 402 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15.96 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,124 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 94 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.58 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 7 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 536 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 87 ஆயிரத்து 861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த 24 மணிநேரத்தில் 1,124 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 430 பேர், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 86 பேர், தமிழகத்தில் 85 பேர், உத்தரப் பிரதேசத்தில் 67 பேர், ஆந்திராவில் 57 பேர், மேற்கு வங்கம், பஞ்சாப்பில் தலா 54 பேர், டெல்லியில் 46 பேர், சத்தீஸ்கரில் 40 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x