Last Updated : 26 Sep, 2020 07:10 PM

 

Published : 26 Sep 2020 07:10 PM
Last Updated : 26 Sep 2020 07:10 PM

வேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி  ஆதித்யநாத்

சர்ச்சைகளையும் போராட்டங்களையும் கிளப்பியுள்ள விவசாய மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், ஹரியாணா, விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி ரயில் ரோகோ வரை சென்று விட்டனர், விவசாய மசோதக்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளாகவே, விவசாய அமைப்புகளாகவே இருக்கின்றன.

பிரதமர் மோடியோ விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்கிறார். நிபுணர்களோ குறைந்த பட்ச ஆதாரவிலை அமைப்பு போய்விடும், மண்டிகள் காலியாகிவிடும், தனியார்கள் கார்டெல் அமைத்துக் கொண்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் விளைபொருட்களை வாங்கி, செயற்கையான தேவையை உருவாக்கி விலையை ஏற்றி விற்பார்கள் என்று கூறுகின்றனர்.

ஆனால் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த மசோதா தாக்கல் விவசாயிகளை தரகர்கள் பிடியிலிருந்து விடுவிக்கும் என்றும் தங்கள் விளைபொருளை தங்கள் விருப்பத்துக்கு விற்க முடியும் என்று பழைய பல்லவியைப் பாடுவதாக உ.பி.எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால் யோகி கூறும்போது, ‘எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர், அவர்கள் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். விவசாய மசோதாக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்.

கடினமான காலங்களில் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்தான் அதிகாரத்தில் இருக்க முடியும். கடந்த 6 மாதங்களாக அரசு இலவசமாக உணவு தானியங்களை 12 முறை வழங்கியுள்ளது, யாரும் பசியால் வாடக்கூடாது என்பதுதான் லட்சியம்.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் பெரிய ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டங்கள் இருக்காது. ஒவ்வொரு சாவடியிலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வார்கள்.

வாக்குச்சாவடியை வென்றால் தேர்தலில் வெல்ல முடியும்’ என்றார் யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x