Last Updated : 26 Sep, 2020 06:29 PM

 

Published : 26 Sep 2020 06:29 PM
Last Updated : 26 Sep 2020 06:29 PM

மோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில் விழாது: காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 தொழிலாளர்ச் சட்டங்கள் தொழிலாளர் விரோத சட்டங்களே என்று காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது.

மேலும் இது தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்தி, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலையை அகற்றிவிடும் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

3 சட்டத்திருத்தங்களும் எந்த நிறுவனத்தையும் மூடுவதற்குரிய சட்டத்தடைகளை அகற்றியதோடு 300 ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப எந்த ஒரு அனுமதியும் பெற வேண்டியதில்லை என்று கூறுகிறது.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தொழிலாளர் நல அமைச்சருமான மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய அரசு மீது கூரிய தாக்குதலைத் தொடுத்துக் கூறும்போது, “தொழிற்சங்கங்களை பலவீனமாக்கிவிட்டனர், தொழிலாளர்கள் பாதுகாப்பு வலையை அறுத்து எறிந்து விட்டனர்.

இந்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொள்கிறது. தொழிலாளர்-விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

மோடி அரசு கார்ப்பரேட்டுகள் கூறுவதைத்தான் கேட்கும், இந்தச் சட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர் சங்கம் கூறுவதற்கு செவிகொடுக்காது” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா. “ஒவ்வொரு நலிந்த பிரிவினரையாகக் குறிவைத்து அவர்களுக்கு எதிரான சட்டங்களை வகுத்துவருகிறது மோடி அரசு.

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தக் கையோடு தொழிலாளர்கள் வாழ்விலும் கையை வைத்துள்ளது.

இந்தச் சட்டங்களினால் இங்கு வந்து தொழில் செய்வது எளிதாகும் என்று அரசு கூறுகிறது. ஆனால் சட்டங்களை கூர்ந்து கவனித்தால் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது என்பது தெரியும்.

கரோனா லாக்டவுனினால் புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வை இழந்துள்ளார்கள், அவர்களுக்கு இந்தச் சட்டங்களில் எதுவுமில்லை. இந்த அரசின் மரபணுவிலேயே ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து விட்டு மக்கள் மீது தங்கள் அதிகாரத்தைத் திணித்து வருகிறது” என்றார்.

ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஜி.சஞ்ஜீவ ரெட்டி, “வாணிக எதிர்ப்பு, தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடுவோம். கார்ப்பரேட்டுகளையும் முதலாளிகளையும் ஈர்க்கும் சட்டங்கள் இவை, தொழிலாளர்கள் இதில் சுரண்டப்படுவார்கள். அநீதிக்கு எதிராக தொழிலாளர்கள் குரலெழுப்ப முடியாவண்ணம் சட்டம் இடப்பட்டுள்ளது.

முதலில் 100 பணியாளர்களுக்கும் மேல் கொண்ட நிறுவனங்கள் அனுமதியில்லாமல் யாரையும் வேலையை விட்டு அனுப்ப முடியாது, தற்போது 300 பணியாளர்களாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2-3 கோடி சிறு தொழில்கள் இந்த பாதுகாப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x