Last Updated : 26 Sep, 2020 01:20 PM

 

Published : 26 Sep 2020 01:20 PM
Last Updated : 26 Sep 2020 01:20 PM

உ.பி.யில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு துண்டிப்பு:  கொடூரத்தினால் உயிர் ஊசல்

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண், வெளியில் உண்மையைச் சொல்லாமல் இருக்க அவரது நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற இந்த கொடூரத்தால் அப்பெண்ணின் உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளது.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் டெல்லிக்கு மிக அருகாமையில் இருக்கும் சிறிய மாவட்டம் ஹாத்தரஸ். இதன் கிராமங்களில் ஒன்றான சண்ட்பாவை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண், சம்பவம் நடந்த அன்று வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவரது கிராமத்தின் உயர்குடி சமூகத்தின் 4 இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்றனர். இது, அருகிலுள்ள வயலில் சற்று தூரத்தில் இருந்த அவரது தாய்க்கும் தெரியாமல் இருந்துள்ளது.

மற்றொரு வயலில் இருந்த வீட்டில் அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் கடுமையாகத் தாக்கி உள்ளனர். பிறகு உண்மை வெளியில் தெரியாமல் இருக்க பெண்ணின் நாக்கை வெளியில் இழுத்து துண்டித்துள்ளனர்.

இதனால், மயங்கியவரை சாலை ஓரம் போட்டு விட்டு ஓடி விட்டனர். கிராமவாசிகளின் கண்களில் பட்ட பெண், ஹாத்தரஸின் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார்.

இங்கு நவீன சிகிச்சை இல்லாததன் காரணமாக அருகிலுள்ள அலிகரின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவரின் இருகை மற்றும் கால்களில் உணர்வுகள் இல்லாமல் உள்ளது. இதனால், அவரது உயிருக்கு ஆபத்து இன்னும் நீங்கவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்தில் தாக்கூர், பிராமணர் மற்றும் தலீத் என தலா ஐம்பது குடும்பங்கள் சமபங்கில் வாழ்கின்றனர். இதில் அதிகமாக தமது கைஓங்கிய நிலையில் தாக்கூர் சமூகத்தினர் செயல்படுவதாகப் புகார் உள்ளது.

இவர்களில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட மீதி ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி பிறகு அது கொலை முயற்சியாக மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x