Published : 26 Sep 2020 08:21 AM
Last Updated : 26 Sep 2020 08:21 AM

குடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

மும்பை

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ராம்பாஹூ கவாய் என்பவரின் மனைவி பேபிபாய். இவர் கடந்த 2005-ம் ஆண்டில் சாலை விபத்தில் இறந்தார்.

இது தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு ராம்பாஹூ தாக்கல் செய்த மனுவை, அமராவாதி மாவட்ட மோட்டார் வாகன விபத்துக்கான தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இறந்த பேபிபாய் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர் இல்லை என்றும் வீட்டுப் பணிகளை கவனிக்கும் மனைவியாகதான் இருந்து வந்தார் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இதை எதிர்த்து ராம்பாஹூ மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனில் கிலோர் தனது தீர்ப்பில் கூறியதாவது:

குடும்பத்தை கவனிக்கும் மனைவியின் பணி மிகவும் முக்கியமானதும் சவாலானதும் ஆகும். வீட்டை பார்த்துக் கொள்ளும் மனைவி குடும்பத்துக்கு அளிக்கும் பங்கை பண சம்பாத்தியத்தோடு ஒப்பிட முடியாது. ஒரு மனைவி குடும்பத்தையே தாங்குகிறார். தனது கணவருக்கு ஆதரவாக தூண் போல விளங்குகிறார்.

விடுமுறையும் இல்லாமல் உழைக்கிறார். ஆனாலும், இந்த உழைப்புக்கு அங்கீகாரமோ பாராட்டோ கிடைப்பதில்லை. அது ஒரு தொழில்முறை பணியாகவும் கருதப்படுவது இல்லை. இதற்காக அவருக்கு சம்பளமும் கிடையாது. குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் மனைவி இறந்தால், அதனால் பல்வேறு சேவைகளை குடும்பம் இழக்கிறது. எனவே, பேபிபாய் இறப்புக்கு நஷ்டஈடு வழங்கலாம். பேபிபாயின் கணவருக்கும் அவரது 2 மகன்களுக்கும் காப்பீடு நிறுவனம் ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x