

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில் பிரம்மோற்சவ விழா இம்முறை ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. இதில், 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பர் சூரிய நாராயண அலங்காரத்தில் எழுந்தருளினார். ரங்கநாயக மண்டபத்தில் இருந்து சம்பங்கி மண்டபம் வரை உற்சவரை ஊர்வலமாக கொண்டு சென்று, அங்கு ஒரு மணி நேரம் வரை அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு சந்திரபிரபை வாகன சேவை ஏகாந்தமாக நடைபெற்றது.