Published : 25 Sep 2020 04:26 PM
Last Updated : 25 Sep 2020 04:26 PM

‘‘எஸ்.பி.பி.யின் மெல்லிய குரலை தீய வைரஸ் முடக்கி விட்டது’’ - வெங்கய்ய நாயுடு வேதனை

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
‘‘ எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சோகமான மறைவை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அவரை நான் பல ஆண்டுகளாக அறிவேன். இது உண்மையிலேய, இசை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஆழமான உணர்ச்சி தருணம். ரசிகர்களால் எஸ்பிபி அல்லது பாலு என அன்பாக அழைக்கப்பட்ட அவர், எனது சொந்த ஊரான நெல்லூரைச் சேர்ந்தவர்.

அவரது மெல்லிசை பாடல்களை கேட்டுள்ளதாலும், தாய்மொழி மீது அவருக்கு இருந்த பற்றாலும், ஒரு தலைமுறை முழுவதும் திறமையான இளம் இசை கலைஞர்களை அவர் வளர்த்துள்ளதாலும், அவர் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு.

எனது இதயத்திலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இசைப் பிரியர்களின் மனங்களிலும் அவர் வெற்றிடத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார். அவரது மெல்லிய குரல், துரதிர்ஷ்டவசமாக தீய வைரஸால் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது புன்னகையும், நகைச்சுவையும் நம் நினைவுகளில் பொதிந்திருக்கும். அவரது அசாதாரணமான பாடல்கள், நம் காதுகளில் தொடர்ந்து ஒலிக்கும் மற்றும் வரவிருக்கும் மிக நீண்ட காலத்திற்கு நம் உணர்வில் எதிரொலிக்கும்.

நான் நெருக்கமாக அறிந்த பிரபல இசைகலைஞருக்கு, நான் மரியாதை செலுத்துகிறேன். எதிர்பாராத இழப்பை தாங்கி கொள்ளும் பலத்தை, அவரது குடும்பத்துக்கு இறைவன் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x