Published : 24 Sep 2020 06:49 AM
Last Updated : 24 Sep 2020 06:49 AM

திருப்பதியில் 5-ம் நாள் பிரம்மோற்சவ விழா; கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட வாகன சேவை ஏகாந்தமாக நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி உட்பட அமைச்சர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான நேற்றிரவு கருட வாகன சேவை நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பரும்,  கிருஷ்ணரும் பல்லகில் எழுந்தருளினர். இரவு கருட சேவைக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ரேணிகுண்டா விமான நிலையம் வந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அமைச்சர்கள் நாராயணசாமி, நானி மற்றும் பலர் வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் திருமலை சென்றடைந்தார்.

நேற்று மாலை திருமலையில் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி முதல்வர் ஜெகன்மோகன் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்று காணிக்கைகளை சமர்ப்பித்தார். அதன் பின்னர் அவர் சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் இரவு திருமலையில் தங்கினார்.

இன்று காலையில் ஜெகன்மோகன், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுடன் சுவாமி தரிசனம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x