Published : 23 Sep 2020 07:55 AM
Last Updated : 23 Sep 2020 07:55 AM

திருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர்

திருப்பதியில் நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் காட்சியளித்த மலையப்பர்.

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலையில் உற்சவரான மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். இன்று இரவு கருட சேவை நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 19-ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராய் தலப்பா கட்டுகட்டிய  கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. பின்னர், இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் காலை மோகினி அவதாரமும், இதனை தொடர்ந்து இரவு கருட சேவையும் நடப்பது ஐதீகம். அதுபோல, இன்று இரவு 7 மணியிலிருந்து 8.30 மணி வரை கோயிலுக்குள் கருட வாகனத்தில் மலையப்பர் அருள் பாலிப்பார். இதையொட்டி, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக அளிக்க உள்ளார். இதற்காக முதல்வர் ஜெகன்மோகன் இன்று மாலை திருமலைக்கு வருகிறார். அதன் பின்னர், ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குகிறார். இரவு திருமலையில் தங்கி மறுநாள் காலை மீண்டும் சுவாமியை தரிசனம் செய்கிறார். இவருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் இணைந்து சுவாமியை தரிசனம் செய்கிறார்.

பின்னர், திருமலையில் நடைபெற்று வரும் சுந்தர காண்டம் பாராயணத்தில் இரு மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர். அதன் பின்னர் திருமலையில் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட உள்ள கர்நாடக விடுதிக்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x