Published : 22 Sep 2020 09:20 PM
Last Updated : 22 Sep 2020 09:20 PM

கேரளாவில் போராட்டம் காரணமாக நோய் பரவுவது அதிகரிப்பு; இன்று 4,125 பேருக்குக் கரோனா: முதல்வர் பினராயி விஜயன் தகவல் 

கேரளாவில் இன்று 4,125 பேருக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும், 19 பேர் மரணம் அடைந்ததாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று 4,125 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 681 பேருக்கு நோய் பரவியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 444 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 406 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 403 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 394 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 369 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 347 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 242 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 207 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 197 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 169 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 143 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 81 பேர் வயநாடு மாவட்டத்தையும், 42 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கரோனா பாதித்துச் சிகிச்சையில் இருந்த 19 பேர் இன்று மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் பாதித்தவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 122 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3,463 பேருக்கு இன்று நோய் பரவியுள்ளது. இதில் 412 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இவை இரண்டும் சேர்த்து கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் வரும் 3,875 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 87 பேருக்கு நோய் பரவியுள்ளது. நோய் பாதித்துச் சிகிச்சையில் இருந்த 3,007 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,731 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது நோய்ப் பரவல் மிக மோசமான நிலையில் உள்ளது. நோய் பரவாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் அதிக அளவில் ஆட்கள் கூடக்கூடாது என ஏற்கெனவே பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சில அரசியல் கட்சிகள் தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாகத்தான் கேரளாவில் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. போராட்டங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் போலீஸாருக்கும் நோய் பரவி வருகிறது.

கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாருக்கு நோய் பரவி உள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கணக்கான போலீஸார் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேவையில்லாத போராட்டங்களில் ஈடுபடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

கடந்த 24 மணி நேரத்தில் 38,574 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,20,270 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,94,488 பேர் வீடுகளிலும், 25,782 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

இன்று நோய் அறிகுறிகளுடன் 2,430 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ட்ரூநாட், சிபிநாட் உள்பட இதுவரை மொத்தம் 24,92,757 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர சுகாதாரத் துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு 1,97,282 பரிசோதனைகள் நடத்தப்பட்டன''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x