Published : 22 Sep 2020 06:52 AM
Last Updated : 22 Sep 2020 06:52 AM

இந்திய கடற்படை போர்க் கப்பல்களில் முதல்முறையாக 2 பெண் அதிகாரிகள்

கொச்சியில் பயிற்சியை முடித்த பின் நேற்று வெற்றிச் சின்னத்தைக் காட்டும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் மற்றும் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி. படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் முதல் முறையாக 2 பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்திய கடற்படை தனது பணியிடங்களில் பெண் அதிகாரிகள் பலரை நியமித்திருந்தாலும் போர்க் கப்பல்களில் இதுவரை பெண்களை நியமிக்கவில்லை. நீண்ட பணிநேரம், பணியாளர்கள் தங்கும் இடங்களில் ‘பிரைவஸிக்கு’ வாய்ப்பில்லாதது, தனி குளியல் அறை போன்ற வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போர்க் கப்பல்களில் பெண்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடற்படையில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் மற்றொரு முயற்சியாக போர்க் கப்பல்களில் முதல் முறையாக 2 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி , சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இருவரும் கப்பல் பணியாளர்களில் ஒரு பகுதியாக, கடற்படை போர்க் கப்பல்களில் பணியமர்த்தப்படும் முதல் பெண் அதிகாரிகள் என்ற சிறப்பை பெறவுள்ளனர்.

இவர்கள் போர்க் கப்பல்களில் உள்ள பன்னோக்கு ஹெலிகாப்டர்களில் சென்சார் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்கு பிறகு கடற்படையின் புதிய எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.

உலகின் மிக நவீன பன்னோக்கு ஹெலிகாப்டர்களாக எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் கருதப்படுகின்றன. இவை, சென்சார் கருவிகள் மூலம் எதிரிகளின் ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. இந்த ரகத்தை சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு கொள்முதல் செய்ய கடந்த 2018-ல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021 தொடக்கத்தில் இந்த ஹெலிகாப்டர்களுக்கான டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் படையில்…

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த முதல் 5 ரபேல் விமானங்கள் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலாவில் இருந்து செயல்படும் விமானப் படையின் ‘தங்க அம்புகள்’ படைப் பிரிவில் இவை சேர்க்கப்பட்டன. ரஃபேல் படைப் பிரிவில் தற்போது விமானிகள் அனைவரும் ஆண்களாக உள்ளனர். இந்நிலையில் விமானப் படையில் தற்போதுள்ள 10 பெண் விமானிகளில் ஒருவரை ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்கு விமானப் படை மாற்றியுள்ளது. பயிற்சிக்கு பிறகு இவர் ரஃபேல் விமானிகளில் ஒருவராக பணியாற்றுவார் எனத் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x