Last Updated : 21 Sep, 2020 11:44 AM

 

Published : 21 Sep 2020 11:44 AM
Last Updated : 21 Sep 2020 11:44 AM

முஸ்லிம் நாடுகளின் இந்திய தூதரகப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்க நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி

முஸ்லிம் நாடுகளின் இந்திய தூதரகம் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக நாடாளுமன்றத்தில் கே.நவாஸ்கனி வலியுறுத்தினார். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகின் கொறடாவான இவர், நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற மக்களவையில் பேசினார்.

இது குறித்து ராமநாதபுரம் எம்.பியான கே.நவாஸ்கனி பேசியதாவது: 1949 ஆம் ஆண்டுகளில் ஆட்சி மொழி குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்தது. அப்போது, இந்திய அரசியல் நிர்ணயசபையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் இச்சபையின் கவனத்திற்கு ஒரு முக்கிய பிரச்சினையை கொண்டு வந்தார்.

அவற்றை இந்த சபைக்கு நான் கொண்டுவர விரும்புகின்றேன்.

காயிதே மில்லத் அதில், பன்முகத்தன்மை கொண்ட இந்திய தாய்த்திருநாட்டில் ஒரு மொழி ஆட்சிமொழியாக அமையும் என்றால் அது எம் தாய்மொழி தமிழே என்று ஓங்கி முழங்கினார்.

தமிழகத்தில் இந்தித்திணிப்புக்கு எதிராக பல்வேறு தளங்களில், மக்கள் எதிர்த்து வருகின்றார்கள். அதிலும் தற்போதைய புதிய கல்விக் கொள்கை மொழித்திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தமிழகக் கல்வியாளர்கள் இடையே வருத்தம் நிலவுகிறது.

எனவே, எத்தகைய மொழியையும் திணிக்கக்கூடாது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். பல நூற்றாண்டுகள் கடந்து இலக்கிய, இலக்கணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்மொழி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.

யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களின் விருப்பம் இல்லாது எந்த ஒரு மொழியையும் திணிப்பது கண்டிக்கத்தக்கது.

நம்முடைய பிரதமரின் உரைகளில் மட்டும் தமிழ் மொழியின் மேன்மையும், பெருமையும் கலந்து இருக்கின்றது. ஆனால் செயல்பாடுகளில் அத்தகையது இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதியை காட்டிலும், தமிழுக்கு வழங்கப்படும் நிதி குறைவு என்பது அதனை பிரதிபலிக்கின்றது. எனவே மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஓமன் நாட்டில் இந்திய தூதரகத்தின் சார்பாக செயல்படக்கூடிய பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை,

மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுவதுபோல தமிழ்வழிக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

அங்கு படிக்கக்கூடிய தமிழர் குடும்பத்து மாணவர்களுக்கு தமிழ் கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை செய்பவர்களாக, தொழில் நிமித்தமாக அங்கேயே வசித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போதும், தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியே படிப்பதற்கு,

அங்கேயும் தமிழ்வழிக் கல்வியை படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x