Last Updated : 21 Sep, 2020 11:30 AM

 

Published : 21 Sep 2020 11:30 AM
Last Updated : 21 Sep 2020 11:30 AM

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல்: உபியின் ஆக்ராவில் ஏமாற்றி பலன் பெற்ற 1952 பேர்

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல் நடைபெற்றிருப்பது தெரிந்துள்ளது. உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் ஏமாற்றி 1952 பேர் பலனடைந்துள்ளனர்.

மத்திய அரசின் பொதுமக்களுக்கானத் திட்டத்தில் சிறந்ததாகக் கருதப்படுவது ‘பிரதமர் வீட்டுவசதி திட்டம்’. இதன்மூலம், தமது சொந்த நிலத்தில் முதன்முறையாக வீடுகட்டுவோருக்கு அரசு சார்பில் ரூ.2.5 லட்சம் அளிக்கப்படுகிறது.

இதேபோல், கிராமப்புறங்களில் வீடுகட்டுவோருக்கு ரூ.1.2 லட்சமும் மத்திய அரசால் கிடைக்கிறது. இத்திட்டத்தில் வேறு சில நிபந்தனைகளும் இடம் பெற்றுள்ளன.

இவைகளை மீறும் வகையில் உ.பியின் ஆக்ராவில் ஏமாற்றி 1952 பேர் இந்த அரசு மானியத்தை பெற்றுள்ளனர். இவர்களில் பல அடுக்குகளிலான சொந்த வீடுகள், டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் அதை காட்டாமல் ஏமாற்றி உள்ளனர்.

இந்த திட்டத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டிபடி எடுக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் சமூகக் கணக்கெடுப்பில் இடம்பெற்றவர்கள் பயனாளிகளாவர். இதில் இடம்பெறாத பலரும் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் உபியின் ஆக்ரவில் பயனடைந்து இருப்பதாக 2 வருடங்களுக்கு முன் அரசிற்கு புகார் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு திட்டத்தின் பலன் பெறவர்கள் இடையே மீண்டும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் முடிவுகளில் ஆக்ராவில் 1952 பேர் சிக்கியுள்ளனர்.

இத்துடன் திட்டத்தின்படி தகுதிபெற்ற 6737 பேர் விண்ணப்பித்தும் மானியத்தொகை பெறாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றி பலன் அடைந்தவர்கள் பெயர்களை ஆக்ரா நிர்வாகம் தனது தலைமை செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.

இவற்றை பரிசீலித்து அப்பட்டியல் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இவர்களை தேர்வு செய்வதில் நடைபெற்ற தவறுகள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

சமீபத்தில் விவசாயிகளுக்கானப் பிரதமர் நிதியுதவி திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடைபெற்றிருப்பது வெளியானது. இந்த ஊழல் உபியின் பல்ராம்பூர் மாவட்டத்திலும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தவகையில், தற்போது பிரதமர் வீட்டுவசதி திட்டத்திலும் ஊழல் வெளியாகி வருகிறது. இது, மேலும் பல பகுதிகளில் நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x