Last Updated : 21 Sep, 2020 08:42 AM

 

Published : 21 Sep 2020 08:42 AM
Last Updated : 21 Sep 2020 08:42 AM

4 நாடுகள், 56 ஆயிரம் கி.மீ. தூரம் ஆன்மிக பயணம்: 71 வயது தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்

பெங்களூரு

கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள போகடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (41). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்
தில் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை தட்சணாமூர்த்தி காலமானார். இதனால் மனமுடைந்த தாய் சுதா
ரத்னம்மா (71), 21 கோயில்களுக்கு போய் நேர்த்திக் கடன் செலுத்த‌ வேண்டும் என மகனிடம் கூறியுள்ளார்.

இதற்காக தனது தந்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய பழைய ஸ்கூட்டரை தயார் செய்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தனது தாயுடன் ஆன்மிக பயணமாக மைசூருவில் இருந்து புறப்பட்டார்.

முதலில் பேளூர் ஹலபீடு, மேல் கோட்டை என கர்நாடகா முழுவதும் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோயில்களில் வழிபட்டனர். மேலும் நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் சென்று கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த ஆன்மீக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயும் மகனும் 2 நாட்களுக்கு முன்னர் மைசூரு திரும்பினர்.

எல்லாமே அம்மாதான்..

இந்தப் பயணம் குறித்து கிருஷ்ணகுமார் கூறியதாவது:

எனக்கு கல்யாணம் ஆகவில்லை. என் அப்பாவுக்கு பின் அம்மா மட்டும் தான் எனக்கான உறவு. அவர் இந்த வீட்டைத் தாண்டி பெரிதாக எங்கேயும் சென்றதில்லை. அம்மா, மன நிம்மதிக்காக கோயிலுக்கு போக விரும்பினார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் என் வேலையை ராஜினாமா செய்து விட்டு கிளம்பினேன்.

ஒட்டுமொத்தமாக 2 ஆண்டுகள் 9 மாதங்கள் இந்த ஆன்மிக பயணத்தை நிறைவு செய்திருக்கிறோம். என் அப்பாவின் பஜாஜ் ஸ்கூட்டரிலேயே 4 நாடுகளில் 56 ஆயிரத்து 522 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறோம். க‌ரோனா பரவலுக்கு மத்தியிலும் என் அம்மாவை ஆன்மிக தலங்களை சுற்றி காண்பித்து, அவரது ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார்.

தாய் சுதா ரத்னம்மா கூறும்போது, "இந்த ஸ்கூட்டரில் அமர்ந்து இவ்வளவு தூரம் பயணித்தது கஷ்டமாக தெரியவில்லை. எனக்கு
வயதாகிவிட்டதால் மகன் மிகவும் நிதானமாகவே வண்டியை ஓட்டினார். இரவில் பெரும்பாலும் பயணிக்கவில்லை. இனம், மொழி,
சாதி, மத பேதமில்லாமல் மக்கள் மிகுந்த அன்போடு எங்களை கவனித்து கொண்டனர். வழிநெடுகிலும் கடவுளே எங்களுக்கு மனிதர்கள் வடிவத்தில் வந்து துணையாக இருந்தார்'' என்றார்.

மகேந்திரா கார் பரிசு

தகவல் அறிந்த மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, "தனது தாய்க்காக ஸ்கூட்டரில் சிரமத்தோடு பயணிக்கும் கிருஷ்ண
குமாருக்கு மகேந்திரா நிறுவனத்தின் சிறந்த கார் ஒன்றை பரிசளிக்க விரும்புகிறேன். அடுத்த ஆன்மிக பயணத்தை தாயும் மகனும் அதில் சிரமம் இல்லாமல் பயணிக்கலாம்" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x