Published : 21 Sep 2020 08:22 AM
Last Updated : 21 Sep 2020 08:22 AM

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடன் 23-ல் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது, மாநிலமுதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதன் அடிப்படையில், பொது முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த மாதம் 11-ம்தேதி, கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில், கரோனாவைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் சுமார் 1 லட்சம் பேர் புதிதாக இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே கரோனா பரிசோதனை எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6.24கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் கரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது.

காணொலி மூலம்..

இந்த சூழ்நிலையில், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x