Published : 20 Sep 2020 04:24 PM
Last Updated : 20 Sep 2020 04:24 PM

‘‘விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்; வரலாற்றில் இன்று கறுப்பு தினம், ஜனநாயகப் படுகொலை’’ - காங்கிரஸ் கடும் சாடல்

ஜனநாயக நடைமுறையை புறந்தள்ளி விட்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை, வரலாற்றில் இன்று கறுப்பு தினம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார். இதனைத் தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசினர்.

ந்த மசோதாக்கள் விவாசயிகளுக்கு எதிாரானது, குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்யக்கூடியது எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

மேலும், அந்த மசோதாக்களை நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். ஆனால், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவையில் பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

மேலும், பிற்பகல் 3 மணிக்குபின் அவையில் கிருமி நாசினி தெளிக்கப்பட இருப்பதால் நாளை வரை அவையை ஒத்திவைப்பதாக துணைத்தலைவர் அறிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.கள் மாநிலங்களவைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் கூறியதாவது:

வரலாற்றில் இன்று கறுப்பு தினம். ஜனநாயக நடைமுறையை புறந்தள்ளி விட்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க ஜனநாயகப் படுகொலை. மாநிலங்களவை துணைத் தலைவருக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.’’ எனக் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x