Last Updated : 20 Sep, 2020 09:40 AM

 

Published : 20 Sep 2020 09:40 AM
Last Updated : 20 Sep 2020 09:40 AM

பிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா, பதிவு செய்யப்பட்டதா?: காங்கிரஸுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்

புதுடெல்லி


பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பிரதமர் தேசிய நிவாரண நிதி இதுவரை பதிவு செய்யப்படாதது ஏன் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரிவிதிப்பு மற்றும் பிறச்சட்டங்கள் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அவசரக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.

ஆனால், காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட பிரதமர் தேசிய நிவாரண நிதி கடந்த 1948-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஏன் பதிவு செய்யப்படாமல் இயங்குகிறது, அதைப் பற்றி இதுவரை காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் ஏன் இந்த அமைப்பை பதிவு செய்யவில்லை என்று காங்கிரஸ்கட்சியினர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்

ஆனால், உங்கள் கட்சியில்தான் ஒருமித்த குரல் என்பதே இல்லையே. கடந்த 50 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் 23 எம்.பி.க்கள் சேர்ந்து கடிதம் எழுதியிருக்கிறீர்கள். முதலில் வெளிப்படைத்தன்மை, சேவை என்பது நம்முடைய இடத்திலிருந்து தொடங்க வேண்டும்.

பிஎம்கேர்ஸ் மற்றும் பிரதமர் தேசிய நிவாரண நிதி இரண்டிலுமே பதிவு செய்யப்படும் அம்சம், தணிக்கை முறை, நிர்வாகம், மேலாண்மை, வரிவிலக்கு, சிஎஸ்ஆர் நிதி ஆகிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பிஎம் கேர்ஸ் மற்றும் பிஎம் தேசிய நிவாரண நிதி ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், நிதியை நிர்வாகம் செய்வதாகும். பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரதமர் பிரதான உறுப்பினராகவும், நிர்வாகிகளான உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருக்கிறார்கள். மேலும், நிர்வாகரீதியில் அல்லாத அறிவியலில் புகழ்பெற்றவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

அறக்கட்டளை நிர்வாகம், முடிவுகள் எடுப்பவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் கூட்டங்கள், கூட்டங்களில் பதிவு செய்யப்படும் முடிவுகள் அடிப்படையில் இருக்கும்.

ஆனால் காங்கிரஸ் உருவாக்கிய பிரதமர் தேசிய நிவாரண நிதியில் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும்தான் நிதியை நிர்வகிப்பார்கள். காங்கிரஸ் கட்சியும், கட்சியின் தலைவரும்தான் நிதியில் இருந்தால், எப்படி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முடியும்.

நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் அரசு, ஜன சங்கத்தின் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அல்லது சோசலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா ஆகியோரை இந்த பிரதமர் நிவாரண நிதியில் உறுப்பினராகச் சேர்த்துள்ளதாக.
காங்கிரஸ் தலைவருக்கு மட்டும்தான் அந்த நிதிநிர்வாகத்தில் இடம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசு நினைத்து. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இடம்.

பிஎம் கேர்ஸ், பிஎம் தேசிய நிவாரண நிதியில் அளிக்கப்படும் வரிச்சலுகைகள் அனைத்தும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. இந்த நிதிக்கு நன்கொடை அளிப்பவர்ளுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. சிஎஸ்ஆர் நிதியும் ஏற்கப்படுகிறது.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x