Last Updated : 20 Sep, 2020 07:47 AM

 

Published : 20 Sep 2020 07:47 AM
Last Updated : 20 Sep 2020 07:47 AM

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் எப்போது அமையும்?- கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் நேற்று முன்தினம் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைஅமைச்சர் அஷ்வின் குமார் சவுபே அளித்த எழுத்துபூர்வப் பதிலில், "மதுரையின் எய்ம்ஸ்மருத்துவமனைக்காக ஜப்பான் சர்வதேச வங்கியிடம் (ஜப்பான்இண்டர்நேஷனல் கோஆப்ரேஷன் ஏஜென்ஸி-ஜேஐசிஏ) கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்க வேண்டும். இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பான் குறிப்பிடும் காலக்கட்டத்தை பொறுத்தே மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியும்" என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் அளித்த தகவலின்படி, பிஎம்எஸ்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உள்ள 24 மாநிலங்களின் 75 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், அதிநவீன தீவிர மற்றும் விபத்து சிகிச்சைப்பிரிவாகவும் மேம்படுத்தப்படு கின்றன. படிப்படியான இப்பணியில், தமிழகத்தின் சேலம், மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் அரசுமருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் சவுபேவின் பதிலில், ’நாடு முழுவதிலும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிஎம்எஸ்எஸ்ஒய் திட்டத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், 6 இடங்களில் பணி முடித்து செயல்பாட்டில் உள்ளன. மற்ற 16 எய்ம்ஸ் கட்டிடப்பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x