Published : 20 Sep 2020 06:53 AM
Last Updated : 20 Sep 2020 06:53 AM
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பெருந்தொற்று நோய்கள் திருத்த மசோதா-2020-ஐ மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
மசோதாவுக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சரோஜ் பாண்டே, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பேசினர். மசோதாவை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசினார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறும்போது, ‘‘இந்த சட்டத்திருத்த மசோதாவானது, ஆபத்தான தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க உதவுவதுடன், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க மத்திய அரசின் அதிகாரங்களை விரிவுபடுத்துகிறது. சுகாதாரப் பணியாளர்களை அவமதித்தாலோ தாக்கினாலோ, 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த மசோதா வகை செய்கிறது’’ என்று கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவான் பேசும்போது, “ஊதியம் இன்றி வேலை பார்க்கும் ஆஷா தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். நீண்ட விவாதத்துக்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT