Published : 19 Sep 2020 08:43 PM
Last Updated : 19 Sep 2020 08:43 PM

கேரளாவில் மரணத்தை நேருக்கு நேர் கண்ட கரோனா நோயாளி பூரண குணம்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

கேரளாவில் மரணத்தை நேருக்கு நேர் கண்ட கரோனா நோயாளி பூரண குணம் அடைந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியது:

''கேரளாவில் இன்று மிக அதிகமாக 4,644 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 824 பேருக்கு நோய் பரவி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 534 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 436 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 412 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 351 பேர் திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 349 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 348 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 263 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 222 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 221 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 191 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 95 பேர் வயநாடு மாவட்டத்தையும், 47 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 18 பேர் இன்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 229 பேர் வெளி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3,781 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 498 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 783 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 86 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 36 பேருக்கு நோய் பரவியது.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 2,862 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,951 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 37,488 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,17,695 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 1,92,534 பேர் வீடுகளிலும், 25,161 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 3,070 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 47,452 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ட்ரூ நாட், சிபி நாட் உள்பட இதுவரை மொத்தம் 23,84,611 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள ஆட்களிடம் இருந்து இதுவரை 1,95,207 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் தற்போது 630 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக நோய்ப் பரவல் உள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 2,014 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கொல்லம் மாவட்டத்தில் மரணத்தை நேருக்கு நேர் கண்ட ஒரு கரோனா நோயாளி தற்போது குணம் அடைந்துள்ளார். கொல்லம் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 54 வயதான டைட்டஸ் என்பவர் 43 நாள் வென்டிலேட்டரில் இருந்தார். அதில் 20 நாள் கோமா நிலையில் இருந்தார். தீவிர சிகிச்சையின் பலனாக தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

இதன் மூலம் நமது மருத்துவத் துறை பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி இவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 லட்சம் ரூபாய் செலவு செய்து அவருக்கு டயாலிசிஸ் உட்பட மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டது. 30 முறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. இரண்டு முறை பிளாஸ்மா தெரபி சிகிச்சையும் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூலை 15-ம் தேதி அவருக்குக் கரோனா குணமானது. ஆனால் அவருக்கு மேலும் பல நோய்கள் இருந்ததால் தொடர்ந்து வென்டிலேட்டரிலேயே வைக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. ஆகஸ்ட் 20-ம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். பிசியோதெரபி மூலம் அவருக்குப் பேச்சுத் திறனும் வரவழைக்கப்பட்டது. 72 நாட்கள் சுகாதாரத் துறையினரின் தீவிர முயற்சியின் காரணமாக தற்போது அவர் பூரண குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். ஒரு நோயாளிக்காக இவ்வளவு சிரமப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது தெரியாமல் சிலர் நோயைப் பரப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x