Published : 19 Sep 2020 03:23 PM
Last Updated : 19 Sep 2020 03:23 PM

‘‘விவசாய சட்டங்கள் விவசாயிகளை போர் சூழலில் தள்ளியுள்ளது’’ - ரமேஷ் சென்னிதலா விமர்சனம்

மத்திய அரசின் விவசாய சட்டங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கே உதவும், விவசாயிகளை போர் சூழலில் தள்ளியுள்ளது என கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:
மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கே உதவும். இதனால் விவசாயிகள் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளனர். விவசாயிகளை மோடி அரசு முழுமையாக புறக்கணித்து விட்டது. விவசாயிகளின் நிலைமை தற்போது பரிதாபத்துக்குரியதாக மாறி விட்டது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x