Last Updated : 13 Sep, 2015 10:56 AM

 

Published : 13 Sep 2015 10:56 AM
Last Updated : 13 Sep 2015 10:56 AM

ஜனநாயகத்தை பற்றி பேசும் மோடி; விவசாயிகளை மறந்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

‘‘ஜனநாயகத்தை பற்றி பேசும் பிரதமர் மோடி, அதற்கு அடித்தளமாக உள்ள விவசாயிகள், தொழிலாளர்களை மறந்துவிட்டார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கியது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மாட்டோம். ஆனால் மசோதாவில் மாற்றங்கள் குறித்து யோசனைகள் தெரிவித்தால் ஏற்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

காங்கிரஸின் கடும் எதிர்ப்பால்தான் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பாஜக அரசு கைவிட்டது. அதற்காக வெற்றி விழா கொண்டாடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 20-ம் தேதி காங்கிரஸ் சார்பில் வெற்றி விழா நடக்கிறது. இதில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல், டெல்லி உள்பட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 400 பேர் நேற்று சந்தித்தனர்.

அவர்களிடம் ராகுல் பேசும்போது, ‘‘பிரதமர் மோடி ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார். அதற்கு அடித்தளமாக உள்ள விவசாயிகள், தொழிலாளர்களை மறந்துவிட்டார். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பாஜக அரசு கைவிட்டுவிட்டது. இது காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.

அப்போது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் அமரீந்தர் சிங் ராஜா பிரார் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x