Published : 19 Sep 2020 08:51 AM
Last Updated : 19 Sep 2020 08:51 AM

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இம்முறை ஏகாந்தமாக நடத்தப்படும் இவ்விழா வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீதி உலா இன்றி, கோயிலுக்குள் மட்டுமே வாகன சேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடத்தப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே முதன் முறையாகும்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்களால் ஜொலிக்கிறது. ஏழுமலையான் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொடி கம்பம், பலிபீடம் அனைத்தும் வெளி நாட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.

இம்முறை பிரம்மோற்சவ விழாவில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற 12,000 பக்தர்கள் மட்டுமே திருப்பதியிலிருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வழக்கமாக புரட்டாசி மாத விரதமிருந்து மஞ்சள் ஆடை உடுத்தி நடந்து சென்றாலும் திருமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x