Published : 18 Sep 2020 07:41 PM
Last Updated : 18 Sep 2020 07:41 PM

வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா; இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி

வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா அமலானால் விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பகுதியை கமிஷனாக சம்பாதித்து வரும் இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோசி ரயில் மகாசேது திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். பிகாரில் புதிய ரயில் பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் திட்டங்களை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். காணொலி மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய விவரம் வருமாறு:

வேளாண்மை சீர்திருத்தங்கள் விஷயத்தில் நேற்றைய நாள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பிரதமர் கூறினார். நமது விவசாயிகள் பலவிதமான கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

தங்கள் விளைபொருட்களை விற்பதற்கான சுதந்திரம் இதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பகுதியை கமிஷனாக சம்பாதித்து வரும் இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறினார்.

வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா குறித்து பொய்களைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று பிரதமர் குற்றஞ்சாட்டினார். பல தசாப்த காலங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள், வேளாண்மை விஷயத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்றார் அவர். இப்போது சீர்திருத்தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும், ஏ.பி.எம்.சி. சட்டத்தில் வேளாண்மை மார்க்கெட் விதிமுறைகள் திருத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அரசு வழங்காது என்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும், முன்பிருந்ததைப் போல அரசு கொள்முதல் தொடரும் என்றும் அவர் கூறினார். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, விவசாயிகள் அறுவடை செய்து தங்கள் விளை பொருளை தாங்கள் விரும்பும் விலைக்கு நாட்டில் எந்தவொரு மார்க்கெட்டிலும் விற்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஏ.பி.எம்.சி. சட்டத்தின் கேட்டை உணர்ந்த காரணத்தால், பிஹார் முதல்வர் இந்த மாநிலத்தில் அதை ரத்து செய்துவிட்டார் என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த பிரதமரின் கிசான் கல்யாண் யோஜ்னா, பிரதமரின் கிரிஷி சின்சாய் யோஜ்னா, வேம்பு தடவிய யூரியா, குளிர்பதனக் கிடங்கு நெட்வொர்க் உருவாக்கும் பணிகள், உணவு பதப்படுத்தல் தொழில்கலில் முதலீடு, வேளாண்மை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகப் பிரதமர் பட்டியலிட்டார்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார். கால்நடைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க தேசிய அளவிலான இயக்கம் நடந்து வருகிறது. நாட்டின் விவசாயிகளுக்கு தெளிவான தகவலை அளிக்கும் வகையில், தவறாக வழிநடத்துபவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

விவசாயிகளை பாதுகாப்பதாக சாமர்த்தியம் பேசும் அவர்கள் உண்மையில், பல கட்டுப்பாடுகளில் சிக்கிக் கிடக்கவே விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். இடைத்தரகர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள், விவசாயிகளின் வருமானத்தை கொள்ளையடிப்பவர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இதுதான் நாட்டின் இப்போதைய தேவையாக உள்ளது. இந்த காலத்திற்கான தேவையாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x