Published : 18 Sep 2020 06:20 PM
Last Updated : 18 Sep 2020 06:20 PM

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் ஏழை மாணவர்களுக்கு பள்ளிகள் உபகரணங்களை வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக ஏழைக் குழந்தைகளுக்கு உரிய உபகரணங்களை வழங்கவும், இணையச் சேவையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், பல்வேறு சூழல் காரணமாக தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் இந்த வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

எனவே, ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக உரிய உபகரணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள பல தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியிருந்தன.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லியில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், தங்களது பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இணையச் சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத அனைத்துத் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கி, அவர்களது படிப்புக்குத் தேவையான புத்தகம், உபகரணங்கள், சீருடை உள்ளிட்டவற்றைப் பள்ளிகள் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x