விவசாயிகள் மீதுள்ள பாசத்தினால் அல்ல, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமா ஒரு நிர்பந்தம்தான், : காங்கிரஸ் விமர்சனம்

பஞ்சாப் காங். தலைவர் சுனில் ஜக்ஹர். | ஏ.என்.ஐ.
பஞ்சாப் காங். தலைவர் சுனில் ஜக்ஹர். | ஏ.என்.ஐ.
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்து, சிரோன்மணி அகாலிதளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அளித்த கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சராக ஹர்சிம்ரத் கவுர் இருந்து வந்த நிலையில், இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்ஹர், சிரோமணி அகாலிதள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா குறித்துக் கூறியதாவது:

அது ஒரு நிர்பந்தம், ராஜினாமா என்பது விவசாயிகளின் மீதுள்ள கருணையினாலோ, பற்றினாலோ அல்ல, நிர்பந்தத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக விவசாயிகளை முட்டாள்களாக்கி வந்தனர், ஆனால் கடைசியில் இவர்களே எள்ளி நகையாடுவதற்குரிய நபர்களாகினர்.

மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். மேலும் இந்த நடைமுறையில் தே.ஜ. கூட்டணியில் அகாலிதளம் தன் மரியாதையையும் இழந்தது.

ஏனெனில் விவசாயிகளின் ஆதரவு இவர்களுக்கு இல்லவே இல்லை. மோடிஜி பார்த்தார் விவசாயிகள் ஆதரவில்லாமல் இவர்கள் பயனற்றவர்கள் என்று எண்ணினார், சரி இவர்களை அமுக்குவோம் என்று முடித்து விட்டார். விவசாயிகள் ஆதரவில்லாமல் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் ஒரு சுமைதான் என்று அவர் நினைத்திருப்பார்.

ஆனால் பாஜகவும் விவசாயிகள் பற்றி கவலைப்படும் கட்சியல்ல.

இவ்வாறு கூறினார் சுனில் ஜக்ஹர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in