Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.
சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர், ''வழக்கை தீர்மானிக்கப் போகும் இறுதிவாதத்தை தயார் செய்ய எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.
தற்போது எவ்வித முன் தயாரிப்புகளும் இல்லாமல் திடீரென வாதத்தை தொடங்குவது கடினமானது. எனவே நீதிமன்றம் கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலணை செய்ய வேண்டும்''என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா,''சொத்துக்குவிப்பு வழக்கை தினமும் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
எனவே தான் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பை தொடர்ந்து இறுதி வாதம் தொடங்குமாறு கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும் மூவர் தரப்பிலும் இறுதிவாதம் தொடங்காமல் இழுத்தடிப்பது கண்டனத்திற்குரியது'' எனக்கூறி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி டி'குன்ஹா,''பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு இறுதிவாதம் தொடங்காமல், காலதாமதம் செய்வது கண்டனத்திற்குரியது. எனவே மூவருக்கும் தலா ரூ.3000 அபராதம் விதிக்கிறேன். வருகிற 26-ம் தேதி மூவரும் நேரில் ஆஜராகி இறுதிவாதத்தை கண்டிப்பாக தொடங்க வேண்டும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT