Last Updated : 17 Sep, 2020 01:52 PM

 

Published : 17 Sep 2020 01:52 PM
Last Updated : 17 Sep 2020 01:52 PM

தெற்கு ரயில்வே பணிகளுக்கான 2018-ம் ஆண்டு தேர்வெழுதிய 2,556 பேரில் 1,686 பேர் இந்தியில் எழுதியவர்கள் –சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வியில் வெளியான அதிர்ச்சி தகவல்

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணிக்கான தேர்வின் 2556 இல் 1686 பேர் இந்தி மொழியில் எழுதியவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது, மக்களவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின்(சிபிஎம்) எம்.பியான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வியில் மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலாக உள்ளது.

கடந்த 2018 இல் பணிநியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மதுரை எம்.பியான சு. வெங்கடேசன் மக்களவையில் கோரியிருந்தார். அதற்கான பதிலை மத்திய ரயில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்திருந்தார்.

இதில் அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது: டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் மொத்தம் 2550 பேர் எழுதியிருந்தனர். இதில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1686 பேர். தமிழில் எழுதியவர்கள் 139 பேர்.

மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர். ஜூனியர் எஞ்சீனியர் நியமனத்திற்கான தேர்வை மொத்தம் 1180 எழுதியிருந்தனர்.

இதில் இந்தியில் எழுதியவர்கள் 160, மலையாளம் 315, தமிழ் 268. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் 437 பேர் ஆவர். அசிஸ்டெண்ட் லோகோ பைலட் நியமனத்தில் மொத்தம் 908 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இத்தேர்வை இந்தியில் எழுதியவர்கள் 90, மலையாளம் 176, தமிழ் 333 மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 309 பேர். இவ்வாறு அப்பதிலில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x