Last Updated : 17 Sep, 2020 11:55 AM

 

Published : 17 Sep 2020 11:55 AM
Last Updated : 17 Sep 2020 11:55 AM

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர்: மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி

வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் வேலையை விட்டு வரவில்லை என்றாலும், கரோனா அச்சம் காரணமாக தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டம் கடந்த மே 7-ம் தேதி தொடங்கப்பட்டது. செப்டம்பர் 10-ம் தேதிவரை 13 லட்சத்து 74 237 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் விமானம், கப்பல் மற்றும் தரை வழி எல்லையாகத் தாயகம் வந்துள்ளனர்.

இந்த 13 லட்சம் பேரில், 3 லட்சத்து 8 ஆயிரத்து 99 பேர் வெளிநாடுகளில் வேலைபார்த்துக் கொண்டிருப்போர். இவர்கள் அனைவரும் வேலையை இழக்கவில்லை, பலர் இழந்துள்ளனர். ஆனால், கரோனா சூழல் காரணமாகவே தாயகம் வந்துள்ளனர்.

இதில் வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் வந்தனர். 84 ஆயிரத்து 497 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்துள்ளனர். ஓமனிலிருந்து 50ஆயிரத்து 536 பேரும், சவுதி அரேபியாவிலிருந்து 49 ஆயிரம் பேரும், குவைத்திலிருந்து 44,248 பேரும், கத்தாரிலிருந்து 30,509 பேரும், பஹ்ரைனிலிருந்து 14,920 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் பணிக்கு வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்கு தேவையான விமான வசதிகளை அரசு செய்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு உதவுவதற்காக, ஸ்வதேஷ் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தாயகம் வந்த இந்தியர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற முடியும். இந்த இணையதளம் கடந்த ஜூலை 10-ம் தேதி தொடங்கப்பட்டது.

வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் தாயகம் திரும்பிய இந்தியர்கள் குறித்து அவர்கள் சார்ந்திருக்கும் மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 லட்சம் பேர் இந்தியா வந்ததில், விமானம் மூலம் 11,89,077 பேரும், நில எல்லை வழியாக 1,28,165 பேரும், கடல்வழியாக 3,987 பேரும் வந்தே பாரத் மிஷன் மூலம் வந்துள்ளனர். வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் 85,348 தமிழர்கள் வந்துள்ளனர்''.

இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x